எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்

எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்
வயது 18 மாநிறம்

Saturday 27 February 2010

"என் பெயர் ஜெயராவ்" அவள் பெயர் தமிழரசி நடிகர்

பிறப்பு: 06:05:1966
குடும்பம்: அப்பா வெங்கையா; அம்மா விஜயம்மா. தம்பிகள் டேவிட் & சுகுமார். தங்கை சுஜாதா. மனைவி உஷா இல்லத்தரசி, மகன்கள் ஜான்சன் ராவ் & ராகுல் ராவ் (பள்ளி மாணவர்கள்)
சொந்த ஊர்: "தம்பிரெட்டிபல்ல" நெல்லூர் மாவட்டம்.
இதுவரை: நடிகர்,Theatre Lab நிறுவனர், நாடக இயக்குனர் & நடிப்புப் பயிற்சியாளர், திரைப்படங்களுக்கு Casting Director.
இயக்கிய நாடகங்கள்:
"மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்"
(Walter E. Schafer எழுதிய நாடகத்தை தழுவியது)
"சங்கீத பைத்தியம்" (பம்மல் சம்பந்த முதலியார்)
"நதி அறியாது" (எஸ் ராமகிருஷ்ணன்)
"மஹாவுடன் பத்து நாட்கள்" உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது

கலை ஆர்வம்..

எங்கள் ஊர் கலை செழிப்புள்ள து. சிறு வயதில் சங்கராந்தி (பொங்கல் ) காலங்களில் நடத்தப்படும் "போலேரம்மா", முறம், துடைப்பம் கொண்டு "மாதங்கிகள்" ஆடும் நடனம் இவற்றை எல்லாம் பார்ப்பது எனக்கு ஆர்வமாய் இருந்தது. எட்டாம் வகுப்பு படிக்குபோது நானே ஒரு நாடகம் எழுதி இயக்கி னேன். அதை பார்க்க ஊரே திரண்டுவிட்டது. என் ஆசிரியர்கள் எல்லாம் "எனக்கு ஏன் ஒரு வேடம் கொடுக்கவில்லை..?" என்று கோபித்துகொண்டார்கள். அதை தொடர்ந்து ஒவ்வொரு வருட விடுமுறையிலும் ஒரு நாடகம் போட்டேன். நாடகங்களிலும் நடிப்பிலும் எனக்குப் பிடித்த ஏதோ ஒன்று இருக்கிறது எனபது தெரிந்தது. நாடகத்தின் மூலம் இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியும் என்பதை தெரிந்துகொண்டேன். சென்னையில் நான் தங்கி இருந்த இடம் ரௌடிகளின் கூடாரமாக இருந்தது. முதலில் Students Federation of India (SFI)-ல் சேர்ந்தேன். பின்னர், Young Star Association என்ற அமைப்பைத்தொடங்கி அங்கிருந்த இளைஞர்களை நல்வழிப் படுத்தினேன். இதைப்பார்த்த ஜனோதயம் என்ற NGO, என்னை முழு நேர சமூக சேவகனாக தங்கள் அமைப்பில் செர்த்துக்கொண்டது. தொடர்ந்து நாடகங்கள் மூலமாக பொதுமக்களையும் நல்வழிப்படுத்தினோம்.


கூத்துப்பட்டறை..?

நாடகத்திலும் நடிப்பிலும் அடுத்த கட்ட பயற்சி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஜனோதயம் நிறுவனத்தில் செயலாளராக இருந்த பல்குணன் என்பவரின் அறிமுகத்தில் K.C.மனவேந்தர் நாத் என்பவரின் நட்பு கிடைத்தது. நாடகங்களில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். நாடகத்தில் நான் கொண்டிருந்த ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் உணர்ந்த அவர் என்னை கூத்துப்பட்டறைக்கு அழைத்துச் சென்றார். 1988-ல் ந.முத்துசாமி அவர்களை சந்தித்தேன். கூத்துப்பட்டறையின் முழுநேர நடிகர்களின் முதல் Batch-ல் நானும் ஒருவன். பிரசாத், லாரன்ஸ், ஜெயகுமார், பசுபதி, கலைராணி, நான் (ஜெயராவ்) எல்லோரும் அங்கு முழு நேர நடிகர்கள். அருமையான பயிற்சி கிடைத்தது. நடிப்பு மட்டுமின்றி, நாடகம் தயாரிப்பதில் உள்ள நுணுக்கங்களையும் தெரிந்துகொண்டேன். 1988-ல் "நற்றுவனியப்பன்" நாடகம் தொடங்கி பல நாடகங்களில் விதவிதமான வேடங்களில் நடித்தேன்.

ஒரு நடிகனுக்குத்தேவயான அங்க அசைவுகள் (body language), குரல் பக்குவம் (voice culture), Martial Arts, Folk dance, fitness, flexibility உள்ளிட்ட அனைத்து பயிற்சியும் கிடைத்தது. ஒரு கதாபாத்திரத்தை எப்படி உள் வாங்கிக்கொள்வது, ஒரு கதாபாத்திரத்திற்கு தேவையான உளவியல் தேடல் (Psychological study) என்றால் என்ன என்பதையும் அங்குதான் கற்றேன். எந்த வேடமாக இருந்தாலும் செய்வதற்கு கூத்துப்பட்டறை பயிற்சி உதவுகிறது. இன்றைக்கும் இனிமேலும் நான் உற்சாகமாகவும், ஆர்வமும் குறையாத நடிகனாக இருக்கிறேன் என்றால் அதற்கு கூத்துப்பட்டறை பயிற்சியும் அனுபவமும் முக்கிய காரணம். எதிர்மறையான வாழ்வியல் அனுபவங்களும் மனிதனை பக்குவப்படுத்துகின்றன என்பதையும் அங்குதான் கற்றேன்.

சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவரக் காரணம்...

உண்மயான கலை, நாடகங்களில் முறையான பயிற்சி பெற்ற எனக்கு, எந்த கதாபாத்திரமானாலும் உள்வாங்கி இயல்பாக நடிக்கவரும். நாடகங்களில் விதவிதமான வேடங்கள் செய்திருக்கிறேன் . காமெராவும் பெரிய திரையும் நிச்சயம் ஒரு பிரம்மிப்பை தருகிறது. நானும் ஒரு ரசிகன். ஆனால் என்னை நான் திரையில் பார்க்கும்போது, வழக்கமான பார்த்து சலித்த ஒரு வேடமாக இல்லாமல், என் நடிப்பு ஆற்றலுக்கு சவாலான வேடங்கள் செய்ய விரும்பினேன். என் நடிப்பின் மீதான ஈடுபாடு அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது அது ஒரு நல்ல வேடமாக இருக்க வேண்டும் என்று காத்திருந்தேன்.

அவள் பெயர் தமிழரசியில் நீங்கள்..?

"கஸ்தூரிமான் (2005)" படத்திற்குப் பிறகு இயக்குனர் லோகிததாஸ் எடுக்க நினைத்த ஒரு படத்தின் கதை நாயகன் வேடத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று லோகிததாசிடம் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்ல, லோகிததாஸ் அழைப்பில் அவரது அலுவலகத்திற்கு போனேன். அப்போது மீராகதிரவன் லோகிததாசின் இணை இயக்குனர். (இது அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.) என்னை அங்கு பார்த்த நினைவில் "அவள் பெயர் தமிழரசி"யில் எனக்கு ஒரு வேடம் இருப்பதாக சொன்னார். நான் அவரை சந்தித்தேன். கதை சொன்னார். என் வேடத்தைவிட எனக்கு "அவள் பெயர் தமிழரசி" கதைக்களம் மிகவும் பிடித்துவிட்டது. இப்படிப்பட்ட கதைகளில் நடிக்கத்தான் நான் இவ்வளவு நாட்களாய் காத்திருந்தேன்.

ஜெயராவ், மீனாட்சி, ராதா & வீரசந்தானம்

மீரா கதிரவனுக்கும் ஜெயராவுக்குமான நட்பைவிட, ஒரு இயக்குனருக்கும் நடிகனுக்குமான உறவு ஒரு படி உயர்வானது. இந்த வேடம் நீங்கள் செய்ய வேண்டும் என்று என்னிடம் பொறுப்பை ஒப்படைக்கும் ஒரு உறவு எவ்வளவு உன்னதமானது. நான் அந்த நம்பிக்கையின் உன்னதத்தை உணர்ந்துகொண்டேன். அந்த உறவை எப்படி காப்பற்றிக்கொள்ளவேண்டும் என்பதையும் அறிவேன். ஒரு நண்பன் என்பதை விட ஒரு இயக்குனராக அவர் என் மனதில் உயர்ந்து நிற்கிறார். படப்பிடிப்பின்போது அவருக்கு நேர்ந்த சவால்களை எதிர்கொண்ட விதம், சமாளித்த விதம், எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் படம் எடுப்பதில் அவருக்கு இருந்த தெளிவு, நிதானம், இவை எல்லாமே என்னை கவர்ந்தன. கடமையைச் செய்வதுகூட சாதனை ஆகலாம் ஆனால் போராடி பெறுவதுதான் உண்மையான வெற்றி. மீரா கதிரவனின் போராட்ட குணம் கண்டு ஒரு நண்பனாகவும் நடிகனாகவும் பிரம்மித்தேன். மீராகதிரவன் ஒரு வெற்றியாளனாக வருவதற்கான முன்னோட்டத்தை நான் படப்பிடிப்பில் கண்டேன். நான் வேலை செய்த இயக்குனர்களிலேயே மீராகதிரவன் ஆச்சரியமானவர் அசாத்தியமானவர்.


நடிகராக விருப்பம்கொள்ளக் காரணம்?

நடிப்பு மட்டுமல்ல, என்னை பொறுத்தவரை Art is a positive ideology. உலகின் உன்னதமான பணிகள் என்னவென்று கேட்டால் இசை, நடனம், ஓவியம், எழுத்து, நடிப்பு என்று சொல்வேன். இவை எதுவும் ஆர்வம், அர்ப்பணிப்பு, ஈடுபாடு இல்லாமல் செய்யமுடியாது. இசை இந்த உலகை அழகாக காட்டுகிறது, நடனம் ஆடுபவன் ஒரு சந்தோசமான உலகை காட்டுகிறான், எழுதுபவன் இயற்கையை அழகாக வர்ணிக்கிறான். எல்லாமே Positive energy. இவர்கள் யாருமே பொய்யாக தங்கள் வேலையை செய்யமுடியாது. நல்லதை சொல்பவன்தான் உண்மையான கலைஞன். அவன்தான் வாழ்க்கை மீதான நம்பிக்கையை கொடுக்கிறான். உலகை வாழத்தகுந்த இடம் என்று எடுத்துக் காட்டுகிறான். பொய்யான ஒன்றை சொல்பவன் கலைஞன் ஆக முடியாது. உண்மையான கலைஞன் காலத்தால் அழியாமல் இருப்பான். நானும் ஒரு கலைஞன், நடிகன். நடிப்பை என் தொழிலாக கொண்டதை நான் பெருமையாக நினைக்கிறேன். எந்த வேலையை செய்தாலும் ஒரு தியானமாக (Meditation) செய்யவேண்டும். ஈடுபாட்டோடு செய்யப்படும் எந்த வேலையும் சிறந்த பணியாகிறது. என்னிடம் நடிப்பு பயிற்சி பெரும் நடிகர்களுக்கும் இதைத்தான் சொல்கிறேன். Performance is everywhere but place is different. When you realize that, you may know how to present yourself in a better way.


இனி ஜெயராவ்...?

மசாலா படங்களையும், வெளிநாட்டு படங்களையும் மட்டும் பார்த்துவிட்டு படம் எடுக்க வந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது இயக்குனர்களாக வரும் இளைஞர்கள், கிராமங்களில் வாழ்ந்து, உண்மையான மனிதர்களையும், நம் கலை, கலாச்சாரம் இவற்றின் மதிப்பை தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். நல்ல இலக்கியம், நாவல், கவிதை இவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர்கள் இயக்குனர்களாக வருகிறார்கள். வசனங்களையும் வாய் சவடால்களையும் நம்பாமல் மனித மனங்களையும் அழகிய உணர்வுகளையும் திரையில் சொல்ல முற்படுகிறார்கள். இவர்கள்தான் உண்மையான படைப்பாளிகள். இவர்களிடம் புதுப்புது கதைகளும் கதைக்களங்களும் இருக்கின்றன. இப்படிப்பட்ட இயல்பான கதைகளைத்தான் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த படங்களில்தான் எனக்கு வேலை இருக்கிறது. காலம் கனிந்து வந்திருக்கிறது. இனி எனக்கு சரியான வேட்டை காத்திருக்கிறது.

1 comment: